Tuesday, November 24, 2009

kps2

துளி வெளிச்சம் இல்லாத இருட்டு ராத்திரி. மொஸாட் ஏஜென்ட்டுகள் கள்ளத்தோணியில் ரகசியமாக வந்து சேர்ந்தார்கள்.
அங்கே ஏற்கெனவே சிலர் காத்திருந்தார்கள், அடையாளச் சங்கேதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன, `கார் ரெடியா இருக்கு, வாங்க போலாம்.'
ஆளில்லாத சாலைகளில் வண்டி அதிவேகமாக ஓடியது, கடைசியாக ஒரு சிறிய பாதையின் நடுவே போய் நின்றது.

எதிரெதிரே இரண்டு பெரிய கட்டடங்கள், அங்கேதான் மூன்று `ப்ளாக் செப்டம்பர்' புள்ளிகளுக்கு வட்டம் போட்டிருந்தது மொஸாட்.
இந்தத் தாக்குதல் குழுவின் தலைவர் பெயர், எஹுத் பராக். யார் என்ன செய்யவேண்டும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் விநாடி சுத்தமாகத் திட்டமிட்டு, எல்லோருக்கும் பயிற்சி கொடுத்திருந்தார் அவர்.

ஆனால், இப்போது, எஹுத் பராக் மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் ஒரு பெண்ணாக உருமாறியிருந்தார். அவருடைய கண்கள் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டமிட்டன.

அவரைப்போலவே பெண் வேடம் போட்ட மொஸாட் ஏஜென்ட்டுகள் காரிலிருந்து இறங்கி நின்றுகொண்டார்கள், `யாரும் உள்ளே வராம நாங்க பார்த்துக்கறோம், நீங்க காரியத்தைக் கச்சிதமா முடிச்சுட்டு வாங்க'.
மற்ற மொஸாட் ஏஜென்ட்டுகள் சத்தம் போடாமல் முன்னேறினார்கள். ராத்திரி நேரம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவாக இல்லை. அது அவர்களுக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. திட்டப்படி தங்களுடைய முதல் இலக்கை நோக்கி வேகமாக நடந்தார்கள்.

ஆனால், அவர்கள் யோசிக்க மறந்த விஷயம், வெளியே நடு ராத்திரி. இந்த நேரத்தில் ரோட்டில் ஒரு கார் நிற்கிறது. அதில் சில பெண்கள் தனியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பார்க்கிறவர்களுக்குச் சந்தேகம் வராதா?

சில நிமிடங்கள் கழித்து, ஓர் இளைஞன் அந்தப் பெண்(?)களை நெருங்கினான், `யார் நீங்க?' _ துப்பாக்கியைத் தூக்கினான்.
எஹுத் பராக்கிற்கு யோசிக்க நேரமில்லை, இவனிடம் மாட்டிக்கொண்டால் ஆபத்து. வேறு யாரும் வருவதற்கு முன்னால், இவனைத் தாக்கி வீழ்த்திவிடவேண்டும்!

அடுத்த விநாடி, அந்தப் பெண்களின் கைகளில் துப்பாக்கிகள் முளைத்தன. அந்த இளைஞனை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள்.
அவ்வளவுதான், சத்தம் கேட்டுப் பலர் ஓடி வந்தார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாமல் அவர்கள் விழிக்க, மொஸாட் பெண்கள் தொடர்ந்து சுடவேண்டியிருந்தது.

சில நிமிடங்களில், வந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு திருப்பித் தாக்க ஆரம்பித்தார்கள். அந்த நடு ராத்திரியின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு சண்டை தொடங்கிவிட்டது.

உள்ளே இருந்த மொஸாட் ஏஜென்ட்டுகளுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஏதோ பிரச்னை, என்ன செய்யலாம்?
மொஸாட் ஏஜென்ட்டுகளுக்குச் சொல்லித்தரப்படுகிற பாலபாடங்களில் ஒன்று, மற்றவர்களுக்கு எது நடந்தாலும் சரி, நீ உன்னுடைய திட்டத்தைப் பாதியில் கைவிடக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் நினைத்ததைச் செய்து முடித்தாக வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து முன்னேறினார்கள், திட்டமிட்டபடி ஒவ்வொரு வீடாகக் குறி வைத்துத் தாக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் மூன்று பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதுதவிர, பல உதிரிக் கொலைகளையும் தவிர்க்க முடியவில்லை.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த மொஸாட் ஏஜென்ட்டுகள் பரபரப்பாக வெளியேறினார்கள். பாலஸ்தீனத் தலைவர்களின் பாதுகாவலர்கள், உள்ளூர் போலீஸ் எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அதே காரில் தப்பித்துவிட்டார்கள்.

மீண்டும் கடற்கரை, அவர்களுக்காகக் கள்ளத் தோணிகள் காத்திருந்தன, ஏறிக்கொண்டார்கள். சில நிமிடங்களில் லெபனானுக்கு டாட்டா காண்பித்து மாயமாகிவிட்டார்கள்.

`பொங்கும் இளமை' என்று பெயர் சூட்டப்பட்ட இந்தத் திட்டம், மொஸாட்டுக்கு மிகப் பெரிய வெற்றி. காரணம், இத்தாலி, பிரான்ஸ் மாதிரி பொதுவான நாடுகளில் பாலஸ்தீனத் தலைவர்களை வீழ்த்துவது கஷ்டமே இல்லை, லெபனானில், அவர்களுடைய கோட்டைக்குள் புகுந்து மூன்று பேரை அடித்துவிட்டு வருவது என்றால், நிஜமாகவே சாதனைதான்!
இதனால், `பொங்கும் இளமை'த் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய எஹுத் பராக், மொஸாட் வட்டாரங்களில் பெரிய 'சூப்பர் ஹீரோ'வாகிவிட்டார். அதன்பிறகு அவர் அரசியலில் இறங்கி இஸ்ரேலின் பிரதம மந்திரியாக வந்தது தனிக்கதை.

ஓர் உளவாளி, பிரதமராக முடியுமா? நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறதா?
அப்படியானால், உங்களுக்கு இஸ்ரேலைப் பற்றித் தெரியாது என்று அர்த்தம். அங்கே உளவுத்துறை என்பது ஒப்புக்குச் சப்பாணி அரசாங்க `டிபார்ட்மென்ட்' அல்ல, ஆட்சிக்கும் அரசாங்கத்துக்கும் அத்தியாவசியத் தேவையான ஒன்று.

இதனால், இஸ்ரேல் பிரதமராக வருகிற எல்லோருமே, மொஸாட் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் மிகக் கவனமாக இருப்பார்கள், தங்களுக்கு நன்கு பரிச்சயமான திறமைசாலி நண்பர்களை மொஸாட் தலைவர்களாக நியமித்துவிடுவார்கள், உளவுத்துறை எப்போதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட கலாசார(?)ப் பின்னணி கொண்ட இஸ்ரேலில் ஓர் உளவாளி பிரதமராக வருவது பெரிய விஷயமே இல்லை. சொல்லப்போனால், தங்களுடைய பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகளெல்லாம்கூட முன்னாள் உளவாளிகளாக இருந்தால் நல்லது என்றுதான் இஸ்ரேலில் பலர் விரும்புகிறார்கள், அப்போதுதான் அவர்கள் எதிலும் அசட்டையாக இல்லாமல் கவனமாக ஆட்சி நடத்துவார்களாம்!

மொஸாட் லெபனானில் புகுந்து ரத்த வேட்டை ஆடியிருக்கிறது என்பது தெரிந்தபிறகு, மிச்சமிருக்கும் ப்ளாக் செப்டம்பர் தலைவர்களுக்குப் பீதி பற்றிக்கொண்டது. அடுத்தடுத்து நடந்த கொலைகள் அவர்களுடைய அச்சத்தை இன்னும் அதிகரித்தன.



ஆனால், இத்தனைக்குப் பிறகும், மொஸாட் பெருந்தலைகளுக்கு முழுத் திருப்தி இல்லை, `எல்லாம் ஒழுங்காதான் நடக்குது, ஆனால்...' என்று இழுத்தார்கள்.
காரணம், மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக அவர்கள் தூண்டில் போட்டுப் பிடித்தது எல்லாமே, சின்னச் சின்ன மீன்கள்தான். இவர்களுக்கெல்லாம் தலைவரான ஒரு பெரிய திமிங்கிலம் இன்னும் வலையில் சிக்கவில்லை, சரியாகச் சொல்வதென்றால், அது எங்கே இருக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.


அந்தப் பெரிய `ப்ளாக் செப்டம்பர்' திமிங்கிலம், அபு ஹாசன். முழுப் பெயர், அலி ஹாசன் சாலமெ, செல்லப் பெயர், `ரெட் ப்ரின்ஸ்', அதாவது, சிவப்பு இளவரசன்!

அப்போது அபு ஹாசனுக்கு வயது 33 தான். இதற்குள் இஸ்ரேலியர்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடிய கில்லாடியாக உருவெடுத்திருந்தார்.
பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் அபு ஹாசன். பிரமாண்டமான வீடு, கை தட்டினால் ஓடி வருகிற வேலைக்காரர்கள், வகைக்கு ஒன்றாகப் பல கார்கள், மேலே பாய்ந்து மொய்க்கும் பெண்கள், கவலையில்லாமல் உலகத்தைச் சுற்றும் வாழ்க்கை என்று நீங்கள் இதுவரை சினிமாவில் பார்த்த 'பெரிய இடத்துப் பையன்'களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் குழைத்து கற்பனை செய்துகொள்ளுங்கள், அதுதான் அபு ஹாசன்.

சின்ன வயதிலிருந்தே அபு ஹாசனுக்குப் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் அதிகம். அதற்காகப் பல இயக்கங்கள், அமைப்புகளை உருவாக்கி ஏகப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

`ப்ளாக் செப்டம்பரின்' முக்கியப் புள்ளியான அபு ஹாசன்தான் மியூனிக் படுகொலைக்குச் சூத்திரதாரி என்று நம்பியது இஸ்ரேல். அவர் உயிரோடு சுற்றிக்கொண்டிருக்கும்வரை, மொஸாட் மற்றவர்களைப் பழிவாங்கி எந்தப் பிரயோஜனமும் இல்லை.

அபு ஹாசன் விவகாரம் மொஸாட் ஏஜென்ட்டுகளுக்கு ஒரு தனிப்பட்ட அவமானமாகிவிட்டது. அவரை எப்படியாவது வளைத்துப் பிடித்துவிடவேண்டும் என்று அவர்களும் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர் எங்கே இருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்கிற விவரம்கூடச் சிக்கவில்லை.

1973_ம் ஆண்டு மத்தியில், அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது, `அபு ஹாசன் நார்வே நாட்டில் லில்லிஹாமர் என்ற ஊரில் இருக்கிறார்'.
இந்த விவரத்தை யார் அனுப்பியது, நம்பகமான தகவல்தானா என்பதெல்லாம் மொஸாட்டுக்குத் தெரியவில்லை. ஆனால், அபு ஹாசன் விஷயத்தில் எந்தச் சிறிய வாய்ப்பையும் அவர்கள் தவறவிடமுடியாது.
ஆகவே, அவசரமாக ஒரு மொஸாட் குழு திரட்டப்பட்டது. அவர்கள் கையில் அபு ஹாசனின் புகைப்படத்தைக் கொடுத்து, `இந்த ஆளைத் தேடிப் பிடித்து முடித்துவிடுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள்.
அவர்களுடைய அதிர்ஷ்டம், லில்லிஹாமர் அப்படியொன்றும் பெரிய ஊர் இல்லை. அங்கே அபு ஹாசனைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருக்காது.

மொஸாட் குழு வேலையில் இறங்கியது. அபு ஹாசன் எங்கே இருக்கக்கூடும் என்பதுபற்றித் தகவல் திரட்ட ஆரம்பித்தார்கள், தெருவில் அகப்படுகிற முகங்களை உற்றுப் பார்த்துக் குறிப்பு எடுத்தார்கள்.
ஆனால் உண்மையில், அப்போது அபு ஹாசன் நார்வே நாட்டிலேயே இல்லை. இப்படி ஒரு பொய்யான தகவலைக் கொடுத்து மொஸாட்டை அலைக்கழிக்க வேண்டும் என்று யாரோ திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இந்த விஷயம் தெரியாமல், மொஸாட் ஏஜென்ட்டுகள் லில்லிஹாமரைச் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அவசரத்துக்கு, ஓர் அப்பாவி மாட்டினான்.

அவர்கள் உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் அனுப்பினார்கள், `அபு ஹாசனைக் கண்டுபிடிச்சுட்டோம், அடுத்து என்ன செய்யறது?'
'இதென்ன கேள்வி? சுட்டுத் தள்ளுங்க!'

No comments:

Post a Comment