Tuesday, November 24, 2009

kps1

ஹெலோ, டாக்டர் ஹம்ஷாரி?'

`யெஸ், ஸ்பீக்கிங்'.

`நாங்க இத்தாலியப் பத்திரிகையிலிருந்து கூப்பிடறோம். உங்களை பேட்டி எடுக்கணும்னு விரும்பறோம்.'

உற்சாகமாக நிமிர்ந்து உட்கார்ந்தார் டாக்டர் மஹ்மூத் ஹம்ஷாரி. `ரொம்ப சந்தோஷம். நாம எங்கே, எப்போ சந்திக்கலாம்?'

மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த மொஸாட் ஏஜெண்ட்டுகள் புன்னகையோடு கட்டை விரலை உயர்த்திச் சிரித்துக் கொண்டார்கள். மிகச் சரியாக, ஹம்ஷாரியின் பலவீனத்தைப் பார்த்து அடித்தாகிவிட்டது. இனிமேல் அவரை வீழ்த்துவது அத்தனை சிரமமாக இருக்காது.

பாரிஸில் வாழ்ந்துகொண்டிருந்த டாக்டர் மஹ்மூத் ஹம்ஷாரியின் முக்கியமான வேலை, ஊடகங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என்று எதையும் விட்டுவைக்காமல் பரபரப்பு பண்ணிக்கொண்டிருந்தார் அவர்.



அதனால்தான், இத்தாலியப் பத்திரிகையாளர்கள் அழைக்கிறார்கள் என்றவுடன், உடனடியாக பேட்டிக்குத் தயாராகிவிட்டார் ஹம்ஷாரி. மொஸாட் தனது திட்டத்தின் அடுத்தகட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தது.

'ப்ளாக் செப்டம்பர்' இயக்கத்துடன் மஹ்மூத் ஹம்ஷாரிக்குத் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தவுடனேயே, மொஸாட் தன்னுடைய பழிவாங்கல் வலைகளைப் பின்னத் தொடங்கிவிட்டது. பல ஏஜெண்ட்டுகள் பாரிஸுக்குக்குடிபெயர்ந்து ஹம்ஷாரியின் தினசரி நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான், ரோம் நகரத்தில் மொஸாட் ஏஜெண்ட்டுகள் வைல் ஸ்வாட்டரைச் சுட்டுக் கொன்றார்கள். அதேபோல் மஹ்மூத் ஹம்ஷாரி கதையையும் முடித்துவிடலாமா?

ம்ஹூம், சான்ஸே இல்லை!

காரணம், ஹம்ஷாரி வெளிநாட்டுக்காரராக இருந்தாலும், பிரான்ஸ் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புள்ளியாக உயர்ந்திருந்தார். பாரிஸ் நகரத்தில் பணக்காரர்கள் அதிகம் வாழ்கிற பகுதியாகப் பார்த்துத் தங்கியிருந்தார்.

இதனால், ஹம்ஷாரியை நடுத்தெருவில் சுட்டுத் தள்ளுவது சிரமம். வேறு ஏதாவது வழி யோசிக்க வேண்டும்.

பேசாமல், அவர் வீட்டில் குண்டு வைத்துச் சிதறடித்துவிடலாமா?

செய்யலாம். ஆனால், அதிலும் ஒரு பிரச்னை. ஹம்ஷாரிக்கு ஃப்ரெஞ்சுப் பெண் ஒருவருடன் திருமணமாகியிருந்தது. அமினா என்கிற மகளும் இருந்தாள்.

இதனால், ஹம்ஷாரி வீட்டில் குண்டு வைக்கத் தயங்கியது மொஸாட். ஒருவேளை குண்டு வெடிக்கிற நேரமாகப் பார்த்து ஹம்ஷாரி வேறு எங்காவது போய்விட்டால், அவருடைய அப்பாவி மனைவியும் மகளும் மாட்டிக்கொள்வார்களே!

ஹம்ஷாரி ரகசியமாகக் கொல்லப்பட வேண்டும். அதேசமயம் அவருடைய குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடாது, என்ன செய்யலாம்?

மஹ்மூத் ஹம்ஷாரியின் தினசரி நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கியது மொஸாட். கடைசியில் அவர்களுக்கு ஒரு பிரமாதமான யோசனை கிடைத்துவிட்டது.

பத்திரிகையாளர்களிடம் பேசுவது என்றால், ஹம்ஷாரிக்கு ரொம்பப் பிரியம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, அவருக்குத் தூண்டில் போட்டதுமொஸாட்.

யாரோ ஒருவர் இத்தாலியப் பத்திரிகையிலிருந்து அழைக்கிறார் என்றதும், ஹம்ஷாரி சந்தேகப்படவில்லை. சட்டென்று அவர்கள் சொன்ன இடத்துக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.

அதே நேரத்தில், மொஸாட் ஏஜெண்ட்டுகள் ஹம்ஷாரியின் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே இருக்கும் மேஜை, நாற்காலி, சோஃபா, கட்டில், அடுப்பு, குப்பைத் தொட்டி, எலிப் பொந்தைக்கூட விட்டுவைக்காமல் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இந்த போட்டோக்கள் அனைத்தும் மொஸாட் மேலிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அங்கே ஒரு வெடிகுண்டு நிபுணர் படை இந்தப் புகைப்படங்களைப் புரட்டிப்போட்டு அலசியது. கடைசியாக, ஹம்ஷாரியின் டெலிபோன் வைக்கப்பட்டிருந்த சிறிய மேஜைக்கு டிக் போட்டார்கள்.

உடனடியாக, அதேபோல் இன்னொரு மேஜை தயார் செய்யப்பட்டது. போட்டோவில் இருக்கும் மேஜைக்கும் இதற்கும் துளி வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாதபடி கச்சிதமாக வேலை செய்தது மொஸாட்.

இந்தப் புதிய மேஜைக்குள், சக்தி வாய்ந்த டி.என்.டி. வெடிபொருள்கள் ஒளித்துவைக்கப்பட்டன. அதை வெடிக்கச் செய்வதற்கான ரிமோட் கன்ட்ரோலும் தயாரிக்கப்பட்டது.

மறுபடியும், ஹம்ஷாரிக்கு போன் செய்தது மொஸாட். `டாக்டர், உங்களை ஒரு பேட்டி எடுக்கணும். புறப்பட்டு வர்றீங்களா?'

இப்போதும் ஹம்ஷாரிக்குத் துளி சந்தேகம் வரவில்லை. `உடனே வர்றேன்' என்று ஒப்புக்கொண்டார்.

ஹம்ஷாரி இந்தப் பக்கம் கிளம்பிச் செல்ல, அந்தப் பக்கம் மொஸாட் ஏஜெண்ட்டுகள் அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள். மேஜையை மாற்றிவிட்டார்கள்.

இப்போது, ஹம்ஷாரி வீட்டுக்குள் வெடிகுண்டு வைத்தாகிவிட்டது. அடுத்த வேலை, அவர் மட்டும் தனியாக இருக்கிற நேரமாகப் பார்த்து, அவரை மேஜைக்கு அருகில் வரவழைக்க வேண்டும். அப்புறம் ரிமோட் கன்ட்ரோலில் ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், விஷயம் முடிந்துவிடும்.

1972 டிசம்பர் 8-ம் தேதி, மஹ்மூத் ஹம்ஷாரியின் மனைவி மேரி க்ளாட் மகளைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். சில நிமிடங்கள் கழித்து, மொஸாட் ஏஜெண்ட்டுகள் ஹம்ஷாரிக்கு போன் செய்தார்கள்.

`ஹலோ.'

`நீங்க ஹம்ஷாரிதானே?'

`யெஸ், டாக்டர் மஹ்மூத் ஹம்ஷாரிதான் பேசறேன்.'

பட்டன் அழுத்தப்பட்டது. டெலிபோனுக்குக் கீழே இருந்த குண்டு வெடித்துச் சிதறியது.

அப்போதும், மஹ்மூத் ஹம்ஷாரி சாகவில்லை. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால், அடுத்த பல நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஹம்ஷாரியைக் காப்பாற்ற முடியவில்லை.

மறுநாள், ம்யூனிக்கில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் வீடுகளுக்கு இன்னொரு ரகசியத் தொலைபேசி அழைப்பு வந்தது, `இரண்டாவது ஆள் காலி!'

முன்பு வைல் ஸ்வாட்டர் கொல்லப்பட்டபோது, மொஸாட்மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனச் சண்டையில் இருதரப்பிலும்அவ்வப்போது உயிர் இழப்புகள் நேர்வது வழக்கம்தான் என்பதால், அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால், வைல் ஸ்வாட்டர் இறந்து சில நாட்களுக்குள் மஹ்மூத் ஹம்ஷாரியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டதும்தான், அவர்களுக்கு லேசாகச் சந்தேகம் எழுந்தது. இஸ்ரேலியர்கள் ஏதோ திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள் என்று புரிய ஆரம்பித்தது.

உடனடியாக, பாலஸ்தீன விடுதலைப் போராளிகள், தலைவர்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்ச்சி அலை பரவத் தொடங்கியது. அடுத்து இஸ்ரேல் யாருக்குக் குறி வைத்திருக்கிறது என்று தெரியாமல் எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள்.

அடுத்த சில நாட்களில், அவரைக் கொல்லப்போகிறார்கள், இவரைக் கொன்றுவிட்டார்கள் என்று ஏகப்பட்ட வதந்திகள், யாசர் அராஃபத் தொடங்கி எல்லா பெரிய தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபட்டன, பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்கிற பதற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

மொஸாட்டுக்கு அதுதானே வேண்டும்? பாலஸ்தீனப் போராளிகள் மூச்சு விடக்கூட அவகாசம் தராமல் அடுத்தடுத்த கொலைகளை அரங்கேற்றினார்கள்.

மஹ்மூத் கொலை செய்யப்பட்டு சில வாரங்கள் கழித்து, சைப்ரஸில் ஹூசைன் அல் பஷீர் என்ற பாலஸ்தீன விடுதலைப் போராட்டத் தலைவர் கொல்லப்பட்டார். அவருடைய படுக்கைக்குக் கீழே குண்டு வைத்துச் சிதறடித்திருந்தது மொஸாட்.

அடுத்து, மறுபடியும் பாரிஸ், இந்தமுறை பாசில் அல்குபைஸி என்ற பேராசிரியர் வைல் ஸ்வாட்டரைக் கொன்றதுபோலவே இவரையும் நடுத்தெருவில் சுட்டு வீழ்த்தினார்கள்.

மொஸாட் வரிசையாகக் கொலை செய்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதன்மூலம் இஸ்ரேலின் விரோதிகள் மத்தியில் பயம் பரவுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினார்கள்.

இதனால், மொஸாட் யாருக்கெல்லாம் குறிவைத்திருக்கிறதோ, அவர்களுடைய வீடுகளுக்கு மலர் வளையங்கள் அனுப்பப்பட்டன, `இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் வீட்டுத் தலைவரைக் கொல்லப்போகிறோம், ஆழ்ந்த அனுதாபங்கள்.'

போதாதா? எப்போது கொல்வார்கள், எப்படிக் கொல்வார்கள் என்று புரியாமல் அந்தத் தலைவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போதே, மொஸாட் ஏஜெண்ட்டுகள் கச்சிதமாகக் கதையை முடித்துவிடுவார்கள்.

இந்தக் கொலைச் செய்திகளை, இஸ்ரேல் மூடி மறைக்கவில்லை. `நாங்கள்தான் செய்தோம்' என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு கொலையைப்பற்றியும் விரிவான செய்திகள், கட்டுரைகள் லோக்கல் பத்திரிகைகளில், அதுவும் அரபி மொழியில் வெளியாகும்படி பார்த்துக் கொண்டார்கள்.

ஒருகட்டத்தில், ம்யூனிக் படுகொலைக்குத்தான் இஸ்ரேல் பழிவாங்குகிறது என்கிற விவரம் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்குப் புரிந்துவிட்டது, `இது அநியாயம், நீங்கள் கொலை செய்த நபர்களுக்கும் ம்யூனிக் தாக்குதலுக்கும் துளி சம்பந்தம் கிடையாது' என்று அலற ஆரம்பித்தார்கள்.

மொஸாட் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய அடுத்த பெரிய தாக்குதலைத் திட்டமிட ஆரம்பித்திருந்தார்கள்.

பாசில் அல்குபைஸி கொல்லப்பட்டு, மூன்று நாள் கழித்து, சில மொஸாட் ஏஜெண்ட்டுகள் லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ஜாலியாக ஊர் சுற்றும் இளைஞர்களைப்போல் வேஷம் போட்டுக்கொண்டார்கள், ஆடைக்குள் துப்பாக்கிகளை மறைத்து வைத்தார்கள்.

லெபனான் தேசத்தில், பாலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு அதிகம். அவர்களுடைய கோட்டையில் புகுந்து மொஸாட் என்ன செய்ய முடியும்?

மொஸாட் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந்தமுறை அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலைகளுக்குக் குறி வைத்திருந்தார்கள், எந்தத் தடைகள் வந்தாலும் சரி, அந்த மூன்று பேரையும் கொல்லாமல் விடமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

No comments:

Post a Comment