Tuesday, November 24, 2009

kps 04.10.09

சென்ற நூற்றாண்டின் மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்று, அடால்ஃப் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த இனப் படுகொலை.

அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை. உலகம் முழுக்க, குறிப்பாக ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பரவியிருந்தார்கள்.

ஏனோ, இது ஹிட்லரின் கண்களை உறுத்தியது. யூதர்கள் அழித்து ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்று முடிவெடுத்துவிட்டார்.

இதனால், ஹிட்லர் ஆட்சியின்கீழ் வந்த ஒவ்வொரு தேசத்திலும் யூதர்கள் வேட்டையாடப்பட்டார்கள், சித்திரவதை கேம்ப்களில் அவர்கள் உடலும் மனமும் நரக அவஸ்தையை அனுபவித்தது. தினமும் இத்தனை ஆயிரம் யூதர்களைக் கொல்ல வேண்டும் என்று கணக்கு வைத்துக்கொண்டு செயல்பட்டது நாஜிப் படை.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அடால்ஃப் ஹிட்லர்தான் சூத்திரதாரி. ஆனால், அவருக்குக் கீழிருந்த அடுத்த கட்டத் தலைவர்கள், ஜூனியர் அடிப்பொடிகளும்கூட இந்த விஷயத்தில் ஹிட்லருக்கு இணையான கொடூரர்களாக இருந்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு(?) இல்லாமல், ஹிட்லரால் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இத்தனை லட்சம் யூதர்களைக் கொன்று தீர்த்திருக்க முடியாது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அவருடைய சிஷ்யப் பிள்ளைகள்?

சிலர், ஹிட்லரின் வழியைப் பின்பற்றித் துப்பாக்கி அல்லது சயனைட் உதவியுடன் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் சிலர் எதிரிப் படையினரிடம் சிக்கினார்கள். மற்றவர்கள் தப்பித்து ஓடி காணாமல் போனார்கள்.

யுத்தத்துக்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் அமைதியைத் தேடிக்கொண்டிருந்த நேரம். யூதர்களின் மனம் மட்டும் ஆறவில்லை.

'ஐயா பெரியவர்களே, நீங்களெல்லாம் நிலம் இழந்தீர்கள், அல்லது பணம் இழந்தீர்கள், அல்லது பதவி இழந்தீர்கள். நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். இந்தக் கொடுமைகளுக்குப் பழிவாங்காமல் விடமாட்டோம்.'

ஆனால், இனிமேல் யாரைப் பழிவாங்க முடியும்? ஹிட்லர்தான் மேலே போய்ச் சேர்ந்துவிட்டாரே!

அதனால் என்ன? ஹிட்லருக்குச் சமமாக, அல்லது அவரைவிட ஒரு படி மேலே போய் யூதர்கள்மேல் இரக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கொடுமைக்காரர்கள் பலர் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்கள்? அவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டனை கொடுப்போம்!

இப்படிச் சொன்ன யூதர்கள், தங்களுக்கு `நாக்மின்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். இதன் அர்த்தம், `பழிவாங்குபவர்கள்!'

நாக்மின் என்பது, யாரும் அதிகாரபூர்வமாக ரிப்பன் வெட்டித் தொடங்கிவைத்த அமைப்பு இல்லை. ஹிட்லர் படைகளின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர் தாங்களே ஒருங்கிணைந்து இந்த ரகசிய இயக்கத்தை உருவாக்கினார்கள்.

ஒருவிதத்தில், யூதர்களின் முதல் உளவுத்துறை அதுதான். முன்பு ஹிட்லருக்குக் கீழே பணிபுரிந்த முக்கியப் புள்ளிகளில் யார் யார் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று முதலில் பட்டியல் போட்டார்கள். அதன்பிறகு, அவர்கள் இப்போது எங்கே, என்ன வேஷத்தில் ஒளிந்திருக்கிறார்கள் என்பதைக் கவனமாகத் துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.

அடுத்தபடியாக, இந்த முன்னாள் நாஜிக்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடங்கின. சிலரைக் காட்டிக்கொடுத்துக் கைது செய்து உள்ளே தள்ளினார்கள். இன்னும் சிலரை நேரடியாகக் கொலை செய்து முடித்துவைத்தார்கள். இதற்கெல்லாம் அவர்கள் யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான், யூதர்களுக்கான தனி நாடு (இஸ்ரேல்) உருவாகியிருந்தது. அவர்களுக்குப் பல அரசியல் பிரச்னைகள், எல்லைக் குளறுபடிகள், மற்ற தலைவலிகள், இதையெல்லாம் ஒருவழியாக ஒழுங்கு செய்வதற்குள் இஸ்ரேல் ஆட்சியாளர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது.

இப்படி இஸ்ரேல் தனது 'ஸ்டார்ட்டிங் ட்ரபுள்'களைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், `நாக்மின்'களிடமிருந்து தப்பிய முன்னாள் நாஜிப் படையினர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்காங்கே செட்டிலாகியிருந்தார்கள். பொய்ப் பெயர்தான், டுபாக்கூர் அடையாளங்கள்தான், ஆனால் யாருடைய தொந்தரவும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை, போதுமே!

1954-ம் வருடம், இஸ்ரேலுக்கு ஒரு தகவல் கிடைத்தது, `அந்த அழுக்குப் பன்றி, இப்போது அர்ஜென்டினாவில் இருக்கிறது.'

இங்கே `அழுக்குப் பன்றி' என்று குறிப்பிடப்படுபவர், ஒரு முன்னாள் நாஜி, அவர் பெயர் அடால்ஃப் ஐக்மென்.

ஜெர்மனியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஐக்மென், சின்ன வயதிலேயே தாயை இழந்துவிட்டார். அதன்பிறகு, அவரது குடும்பம் ஆஸ்திரியாவுக்குக் குடிபெயர்ந்தது.

ஐக்மெனுக்குப் படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு வேலைக்குப் போனார், அதுவும் சரிப்படவில்லை.


இதனால், ஐக்மென் தாழ்வு மனப்பான்மையில் மூழ்கினார். எப்படியாவது, ஏதாவது ஒரு விஷயத்தில் தன் திறமையை நிரூபித்துவிடவேண்டும் என்று துடித்தார்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான், ஹிட்லர் ஐரோப்பா முழுக்கப் பிரபலமாக ஆரம்பித்தார். அவர் ஹீரோவா, வில்லனா என்று புரியாமல் குழம்பியது உலகம்.

அடால்ஃப் ஐக்மெனுக்கு ஹிட்லரைப் பிடித்திருந்தது. அவரையே தனது ஆதர்சமாக ஏற்றுக்கொண்டு, நாஜிக் கட்சியில் இணைந்துவிட்டார்.

`கட்சி' என்றால், பொதுக்குழு, செயற்குழு, தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் கிடையாது. ஹிட்லர் இன்னும் பெரிய திட்டங்கள் வைத்திருந்தார். அவற்றை நிறைவேற்றுவதற் கான ஒரு படையைத் திரட்டிக்கொண்டிருந்தார்.

இந்தப் படையில், அடால்ஃப் ஐக்மெனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, யூதர்களை வெளியேற்றுவது!

ஏதோ காரணத்தால், தன் ராஜ்ஜியத்தில் யூதர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார் ஹிட்லர். ஜெர்மனியில் மட்டுமில்லை, அவர் எங்கெல்லாம் கால் பதிக்கிறாரோ, அங்கெல்லாம் களை பிடுங்குவதுபோல் யூதர்கள் பிய்த்து எறியப்பட்டார்கள்.

ஆரம்பத்தில், ஹிட்லர் படையினர் கொலை ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. யூதர்களை ஜஸ்ட் வெளியே துரத்தினார்கள், `எங்கேயாவது போய்விடுங்கள், எப்படியாவது பிழைத்துக் கொள்ளுங்கள், ஹிட்லர் கண்ணில்மட்டும் பட்டுவிடாதீர்கள்.'

அடால்ஃப் ஐக்மென் யோசித்தார், `இப்போது இந்த யூதர்களெல்லாம் எங்கே போவார்கள்? அவர்கள் எங்கே தஞ்சம் புகுந்தாலும், சீக்கிரத்தில் ஹிட்லர் அந்த தேசத்தையும் ஆக்கிரமித்துவிடுவார். அதன்பிறகு மீண்டும் யூதர்களை அங்கிருந்து துரத்தவேண்டும். அநாவசியத் தொல்லை.'

இந்தத் தொந்தரவுக்குப் பதிலாக, யூதர்களை மொத்தமாக அழித்துவிடலாம்' என்றார் ஐக்மென், இந்தத் திட்டத்துக்கு அவர் சூட்டிய பெயர், `கடைசித் தீர்வு.'

ஐக்மெனின் யோசனைக்கு, சீனியர் நாஜிக்களின் அனுமதி உடனடியாகக் கிடைத்துவிட்டது. மளமளவென்று இதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அதன்பிறகு நிகழ்ந்ததுதான் உச்சகட்டக் கொடுமை. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று வித்தியாசமே பார்க்காமல் யூதர்கள் உடனுக்குடன் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு காரணம் போதும், விசாரணை எதுவும் கிடையாது. உடனடித் தண்டனை மட்டுமே.

ஆனால், இப்படி ஸ்லோமோஷனில் ஒவ்வொருவராகச் சுட்டுக்கொண்டிருந்தால், ஒட்டுமொத்த யூதர்களையும் காலி செய்வதற்குப் பல வருஷம் ஆகும். அதுவரை யாரால் காத்திருக்க முடியும்?

அடால்ஃப் ஐக்மெனுக்கு அவசரம். மிக விரைவில் யூதர்களை `முடித்து'விட்டு ஹிட்லர் கையால் மெடல் வாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்.

இதனால், குறைந்த நேரத்தில் அதிக யூதர்களைக் கொல்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார் ஐக்மென். அவருடைய குரூர மனத்தில் ஏகப்பட்ட புதிய உத்திகள் தோன்றின.

உடனடியாக, ஹிட்லர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு தேசத்திலும், யூதக் கைதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்களை ரயிலில் மாடுகளை அடைப்பதுபோல் திணித்துவைத்துச் சித்திரவதை கேம்ப்களுக்குக் கொண்டு சென்றார்கள்.

கொடுமையான இந்தப் பயணத்திலேயே பல யூதர்கள் இறந்து போனார்கள். மிச்சமிருந்தவர்களுக்கு வெந்நீர்த் தொட்டிகள், விஷ வாயு அறைகள், நெருப்புக் குளியல் என்று பலவிதமான தண்டனைகள் காத்திருந்தன.

இப்படி அடால்ஃப் ஐக்மெனின் உத்தரவால் உயிர் இழந்த யூதர்களின் எண்ணிக்கை, ஐந்தாயிரம், பத்தாயிரம் இல்லை, அரைக் கோடிக்குமேல்!

`லட்சக்கணக்கில அப்பாவி யூதர்களைக் கொல்றீங்களே, இதுபத்தி உங்களுக்குக் கவலையோ, வருத்தமோ, குற்றவுணர்ச்சியோ இல்லையா?' யாரோ ஐக்மெனிடம் கேட்டார்கள், `நாளைக்கு ஒருவேளை ஹிட்லர் தோத்துப்போயிட்டா, இந்தக் கொலைக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்குமே?'

அடால்ஃப் ஐக்மென் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், `நூறு பேர் இறந்துபோனா, அது சம்பவம். ஆனா, லட்சம் பேர் இறந்தா, வெறும் புள்ளிவிவரம், அவ்ளோதான்!'

ஹிட்லருக்கு இணையான ரத்த வேட்கை கொண்டவர் ஐக்மென். யூதர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும் அவரது கண்ணசைவில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

இதனால், போருக்குப்பிறகு உயிர் தப்பிய நாஜிக்களில் யூதர்களின் நம்பர் ஒன் விரோதி என்றால், அடால்ஃப் ஐக்மென்தான். அவருடைய கொலைவெறியுடன் ஒப்பிடும்போது, மற்ற நாஜிக்களின் குற்றங்களெல்லாம் சாதாரண `பிக்பாக்கெட்' ரகத்தில் அடங்கிவிடும்.

ஆனால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐக்மென் எங்கே போனார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. `நாக்மின்'களின் வேட்டையிலும் அவர் அகப்படவில்லை.

இதனால், அடுத்த பல வருடங்களுக்கு எல்லோரும் ஐக்மெனைப் பற்றி கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள். அந்த நேரத்தில்தான், இந்தக் கடிதத்தின்மூலம் `அழுக்குப் பன்றி' வெளியே வந்தது.

உடனடியாக, இஸ்ரேல் அரசாங்கம், உளவுத்துறை அடால்ஃப் ஐக்மென் ஃபைலைத் தூசு தட்டி எடுத்தது. அவரை என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

No comments:

Post a Comment