Tuesday, November 24, 2009

kps 01.10.09

லில்லிஹாமர் சொதப்பல்கள் நடந்து முழுசாக ஐந்து வருடமாகிவிட்டது!
இந்த இடைவெளிக்குள், இஸ்ரேலில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள். இரண்டு பிரதம மந்திரிகள் மாறிவிட்டார்கள். அந்த நாட்டு அரசாங்கத்திலும் சரி, மொஸாட்டிலும் சரி, பழைய `சக்தி'கள் ரிடையராகி, பல புதியவர்கள் தலை தூக்கியிருந்தார்கள்.

ஆனால், இஸ்ரேல் இன்னும் அபுஹாஸனை மறந்திருக்கவில்லை. வெளிப் பார்வைக்கு மொஸாட் நல்ல பிள்ளைபோல் சமர்த்தாக உட்கார்ந்திருந்தாலும், பின்னணியில் தகவல்கள் திரட்டுவது, அலசுவது, திட்டம் தயார் செய்வது, அப்புறம் மொத்தத்தையும் எச்சில் போட்டு அழித்துவிட்டு மறுபடி பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பது என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஐந்து ஆண்டுகளில் அபுஹாஸனும் நிறைய மாறியிருந்தார், ஒரு காலத்தில் ஹை க்ளாஸ் அடியாள்போல் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு திரிந்தவருக்கு, இப்போது அரசியல் வட்டாரங்களில் ஏகப்பட்ட செல்வாக்கு. அவர்தான் யாசிர் அராஃபத்துக்கு அடுத்த வாரிசு என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் மட்டுமில்லை, அதற்கு வெளியிலும் அபுஹாஸனுக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வுக்கும், பாலஸ்தீனத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அவர் இயங்கி வருகிறார் என்று வதந்தி.

1978-ம் வருடம், அபுஹாஸன் கல்யாணம் செய்துகொண்டார். அவருடைய புது மனைவி ஜார்ஜினா ரிஜ்க், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ்!

ஜார்ஜினாவுடன் ஹனிமூன் சென்ற அபுஹாஸன், விரைவில் பெய்ரூட் திரும்பிவிட்டார். லெபனான் நாட்டுத் தலைநகரமான இந்த ஊர்தான், இப்போது அவருடைய கோட்டை!

பெய்ரூட்டில் அபுஹாஸனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். அதைவிட அதிக எண்ணிக்கையில் நண்பிகள்!

கல்யாணமான பிறகும், அபுஹாஸன் தன்னுடைய பழைய `ப்ளேபாய்' வாழ்க்கையை மறந்துவிடவில்லை. ஒவ்வொரு நாளையும் ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார்.

இதைக் கவனித்த அபுஹாஸனின் நண்பர்கள், அவரைக் கடுமையாக எச்சரித்தார்கள், `நீங்க உங்க இஷ்டம்போல விளையாடுங்க. வேணாம்ன்னு சொல்லலை. ஆனா, இப்படி அசட்டையா இருக்காதீங்க. அப்பப்போ உங்க பயணத் திட்டத்தை மாத்துங்க. ஒரே இடத்துக்கு டெய்லி போகாதீங்க. முன்பின் தெரியாதவங்ககிட்டே பழகாதீங்க. மொஸாட் இன்னும் உங்களைத் துரத்திக்கிட்டுத்தான் இருக்கு. அதை மறந்துடாதீங்க!'

அவர்களுடைய அக்கறையான வார்த்தைகளை அபு ஹாஸன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. `இந்த ஊர்ல எவனும் என்மேல கை வைக்க முடியாது' என்கிற மொட்டை தைரியத்தில் அலட்சியமாக இருந்துவிட்டார்.

அந்தப் பக்கம், இஸ்ரேலின் புதிய பிரதமர் மெனகெம் பெகின் மொஸாட்டைக் கூப்பிட்டார், `அந்த அபுஹாஸன் மேட்டர் என்ன ஆச்சு? அந்தாள் எங்கே இருக்கான்னு தெரியுமா?'

`தெரியும் ஸார்.'

`அப்புறம் ஏன் சும்மா இருக்கீங்க?'

இது போதுமே, அதுவரை காகிதத்தில் கோட்டை கட்டிக்கொண்டிருந்தவர்கள், பெய்ரூட்டுக்கு டிக்கெட் எடுக்கக் கிளம்பினார்கள்.


இந்தமுறை, மொஸாட் வெறும் கத்தி, கபடா, துப்பாக்கியை நம்பவில்லை. அபு ஹாஸனின் பலவீனம் எது என்று தெரிந்து, அதற்காகவே ஒரு ஸ்பெஷல் ஆயுதத்தைக் கொண்டு வந்தார்கள்.

அந்த ஆயுதம், ஒரு பெண் உளவாளி. இந்தத் திட்டத்துக்காக அவருக்குச் சூட்டப்பட்ட கற்பனைப் பெயர், எரிகா சாம்பர்ஸ். இதுவே அவரது உண்மைப் பெயராகவும் இருக்கலாம்!

பிரிட்டனைச் சேர்ந்த எரிகாவுக்கு, சமூகப் பணி(?)களில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, பாலஸ்தீன அகதிகளுக்குச் சேவை செய்வது என்றால் எக்ஸ்ட்ரா பிரியம்.

இதற்காக, 1978-ம் ஆண்டு இறுதியில் அவர் லெபனானுக்கு அழைக்கப்பட்டார். பெய்ரூட் வந்து சேர்ந்து வீடு எடுத்துத் தங்கிக்கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.

எரிகா சாம்பர்ஸ் ஒரு மொஸாட் உளவாளி என்கிற தகவல் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் அவருடன் சகஜமாகப் பழகத் தொடங்கினார்கள்.

அதே நேரத்தில், இன்னும் பல மொஸாட் ஏஜெண்டுகள் பெய்ரூட் வந்து சேர்ந்தார்கள், எல்லோருக்கும் வெவ்வேறு (பொய்ப்) பெயர்கள், வெவ்வேறு நாட்டு பாஸ்போர்ட்கள். லில்லிஹாமரில் நிகழ்ந்த தவறை அவர்கள் மறுபடியும் செய்வதாக இல்லை.

பெய்ரூட்டில் எரிகா சாம்பர்ஸ், மற்ற மொஸாட் ஏஜெண்டுகள் திரட்டுகிற தகவல்கள் அனைத்தும், மேலிடத்துக்கு அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு கொலைத் திட்டங்களைத் தயார் செய்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள், எதுவும் சரிப்படவில்லை.

இதற்கு நடுவே, மொஸாட்டின் ஒரிஜினல் திட்டப்படி எரிகா சாம்பர்ஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கப் போராளிகள், தலைவர்கள் வட்டாரத்தில் ஊடுருவ ஆரம்பித்திருந்தார். அபுஹாஸனையும் நெருங்கிவிட்டார்.

சாதாரணமாகவே அபுஹாஸன் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். இப்படி ஒரு வெளிநாட்டுப் பெண் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்றதும், அவருக்குச் சுத்தமாகச் சந்தேகமே வரவில்லை.

அபுஹாஸன், எரிகா சாம்பர்ஸ் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, அவருடைய தினசரி நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் மொஸாட்டுக்குச் சென்று சேர்ந்தது. இதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் தயார் செய்யப்பட்டன.

1979-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி, அபு ஹாஸன் வழக்கமாகப் பயணம் செய்கிற சாலையில் ஒரு வோல்ஸ்வாகன் கார் வந்து நின்றது. அதில் நூறு கிலோ எடையுள்ள வெடிபொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது மொஸாட்.

இந்த காரை வெடிக்கச் செய்வதற்கான ரிமோட் கன்ட்ரோல், பக்கத்திலேயே இன்னொரு வீட்டில் இருந்தது. பட்டனில் விரலை வைத்து அழுத்தியபடி அவர்கள் அபு ஹாஸனுக்காகக் காத்திருந்தார்கள்.

அபுஹாஸனுக்குக் கொஞ்சமாவது உயிர் பயம் இருந்திருந்தால், அவர் தினந்தோறும் ஒரே சாலைவழியே பயணம் செய்திருக்கமாட்டார். வேண்டுமென்றே காரை மாற்றி, ரூட்டை மாற்றி, சந்திப்புத் திட்டங்களை மாற்றி ஏதாவது ஒரு வழியில் தன்னுடைய எதிரிகளைக் குழப்பப் பார்த்திருப்பார்.

ஆனால் அவருக்கு அந்தப் பயமோ, பதற்றமோ சுத்தமாக இல்லை. `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரண மில்லை' என்று பாட்டுப் பாடிக்கொண்டு அதே வழியில் வந்து சேர்ந்தார்.

அப்புறம் என்ன? சரியாக அபு ஹாஸனின் கார் அந்த வோல்ஸ்வாகனைக் கடக்கும்போது, ரிமோட்வழியே குண்டு வெடிக்கப்பட்டது. அபு ஹாஸன், அவருடைய பாதுகாவலர்கள், பக்கத்தில் இருந்த அப்பாவிகள் என்று மொத்தம் ஒன்பது பேர் இறந்துபோனார்கள்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள், எரிகா சாம்பர்ஸ், மற்ற மொஸாட் ஏஜெண்டுகள் சத்தமில்லாமல் பெய்ரூட்டிலிருந்து வெளியேறிவிட்டார்கள். லெபனான் காவல்துறையும் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளும் விழித்துக்கொண்டு துப்புத்துலக்க ஆரம்பிப்பதற்குள், எல்லாத் தடயங்களும் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன.

ரொம்ப நாளைக்குப் பிறகு, இஸ்ரேல் மொஸாட் வட்டாரங்களில் அன்றைக்குத் திருவிழாக் கோலம். மியூனிக் பழிவாங்கல் லிஸ்டில் கடைசியாக மிச்சமிருந்த அபு ஹாஸனின் பெயருக்கு எதிராக டிக் போட்டுக் கொண்டாடினார்கள்.

மொஸாட்டுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த இஸ்ரேலின் அரசியல் சரித்திரத்திலும் இது மிக முக்கியமான சம்பவம். இதன்மூலம், `யாராக இருந்தாலும் சரி, எங்கள்மீது கை வைத்தால் தொலைத்துவிடுவோம்' என்கிற செய்தியைச் சொல்லாமல் சொல்லியிருந்தது இஸ்ரேல்.

இதனால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அழிந்துவிடவில்லை. ஆனால் அதேசமயம், இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் யூதர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்தன. மொஸாட்டுக்கு அதுதானே வேண்டும்?

மியூனிக் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக, மொஸாட் எத்தனை பேரைக் கொன்றது என்கிற கணக்கு சரியாகத் தெரியவில்லை. சிலர் பத்து என்கிறார்கள், இன்னும் சிலர் பன்னிரண்டு, பதினைந்து, இருபது, முப்பது என்று இஷ்டத்துக்கு அடுக்குகிறார்கள்.

ஆனால் ஒன்று, இப்படிக் கொல்லப்பட்ட எல்லோரும் மியூனிக் படுகொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. `இந்தச் சம்பவத்தை நல்ல சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக இயங்குகிறவர்களையெல்லாம் மொஸாட் திட்டம் போட்டு அழித்துவிட்டது' என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில், மியூனிக் படுகொலையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது, அங்கே கொலை செய்யப்பட்ட இஸ்ரேல் விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளில் சுத்தமாக ஒப்புதல் இல்லை.

`ஒரு கொலைக்குப் பழிவாங்குவதற்காக, இன்னொரு கொலை செய்வது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இப்படிக் கொல்லப்பட்டவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்.

மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். இப்படிப் பழிவாங்குகிறேன் பேர்வழி என்று அவர்களுடைய சந்தோஷத்தையெல்லாம் அழித்துவிட்டால் சரியாப்போச்சா? இறந்துபோன எங்களுடைய கணவர்கள், மகன்கள் மறுபடியும் உயிரோடு திரும்பி வந்துவிடுவார்களா?'

அப்படியானால், மொஸாட் வேறு என்ன செய்திருக்க வேண்டும்?

`சில வருஷம் முன்னாடி அடால்ஃப் ஐக்மெனை என்ன செஞ்சீங்க? மறந்துபோச்சா?'

அடால்ஃப் ஹிட்லர் தெரியும். அது யார் அடால்ஃப் ஐக்மென்? அவரை மொஸாட் என்ன செய்தது?

No comments:

Post a Comment